Monday, January 13, 2014

நான் 24 வயது பெண்...

நான் 24 வயது பெண். படித்து முடித்து, தற்போது வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறேன். நான் கம்ப்யூட்டர் வகுப்பிற்கு போகும் போது, எனக்கு ஒரு நண்பன் கிடைத்தான். மனதில் பட்டதை அப்படியே கூறுவான். அதனால், அவனை ரொம்பப் பிடிக்கும். கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிந்ததும், எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை. ஒருநாள் வழியில் பார்த்து, அவனுடைய மொபைல் எண்ணை தந்தான். அன்றிலிருந்து அவனுக்கு போன் செய்ய ஆரம்பித்தேன். இதனால், எங்கள் நட்பு அதிகமாகியது. 
இந்த இடத்தில், ஒரு முக்கியமான விஷயத்தை கூற வேண்டும். அவனுக்கு இரண்டு பெண் நண்பிகளும், ஒரு ஆண் நண்பனும் இருந்தனர். அவர்கள் நால்வரும், நண்பர்கள் எப்படியிருக்கக் கூடாதோ, அப்படியெல்லாம் எல்லை மீறி பழகி கொண்டிருந்தனர். இதை அறிந்த நான், அவனை திருத்தும் எண்ணத்துடன், அவனுடன் பழக ஆரம்பித்தேன். ஆனால், அந்தக் குழியில் நானும் விழுந்துவிட்டதுதான் என் துரதிர்ஷ்டம். 
அவன், என்னை ஒரே நாளில் திரும்பி வரும் தொலைவில் உள்ள ஒரு சுற்றுலா ஸ்தலத்திற்கு அழைத்தான். நான் மறுத்தும், அவன் அடிக்கடி கேட்க, என் மனம் இளகி, அவனுடன் சென்றேன். அங்கு, அவனது ஸ்பரிசம் கிடைத்தது. 
அதன் பிறகும் நானும், அவனும் போனில் தான் அதிகம் பேசுவோம். பெரும்பாலும், உடலுறவைப் பற்றியே அவன் பேசுவான். ஒரு கட்டத்தில், அவனுடன் அவ்வுறவில் ஈடுபட, என் மனம் ஏங்க ஆரம்பித்தது. இச்சமயத்தில், என்னுடன் பணிபுரியும் தோழியுடன், அவனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இதனால், என்னை விட்டு விலக ஆரம்பித்தான். என்னுடன் பேசுவதைத் தவிர்த்தான். என்னிடம் போனில் எப்படியெல்லாம் பேசினானோ, அதே போல் அவளுடனும் பேச ஆரம்பித்துள்ளான். அவள் பேசுவதை வைத்து, இதைத்தான் பேசிக் கொள்கின்றனர் என்று துல்லியமாக அறிய முடிந்தது. இதனால், என் மனதில், அவன் மீது ஆத்திரம் அதிகமாகிறது. 
இதற்கிடையில், அவனுக்கு மூன்று மாதத்திற்கு முன் திருமணமாகி விட்டது. இருப்பினும், அவர்களது உறவில், எந்த மாற்றமும் இல்லை. அவளுடைய வீட்டிலேயே அவன் அடிக்கடி உள்ளான். அவர்கள் வீட்டிலும் தவறாக நினைப்பதில்லை. இப்பொழுது, அந்தத் தோழியால், எனக்கும், அவனுக்கும் பிரச்னை அதிகமாகி, இருவரும் பேசிக் கொள்வதில்லை. என்னால், அவனை மறக்க முடியவில்லை. என்னால், என் மனதை அடக்கவும் முடியவில்லை. 
அவன் நல்லவனா, கெட்டவனா? என்னால் அவனை மறக்க முடியுமா? என் மனதைக் கட்டுப்படுத்துவது எப்படி? 
இது எல்லாம் தவறு என்று, எனக்குத் தெரிகிறது. நான், ஏன் இப்படி மாறிப் போனேன் என்று, எனக்கே தெரியவில்லை. நல்ல ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 
— இப்படிக்கு,
உங்கள் மகள். 


பிரியமான மகளுக்கு, 
உன் கடிதத்தை படித்து, விவரங்களை அறிந்தேன். என்ன மாதிரியான மனநிலையில், தற்பொழுது, நீ இருக்கிறாய் என்று, என்னால் உணர முடிகிறது. 
இன்றைய நவீன கால ஆண்களும், பெண்களும், 'செக்ஸை' ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்த்து, அது பற்றிய எண்ணங்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். 100க்கு 99 சதவிகித இன்றைய காதலர்கள், உடல் சம்பந்தமான விஷயங்களைத் தான் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். உள்ளம் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது வருங்கால திட்டங்கள் பற்றியோ அவ்வளவாக அவர்கள் பேசுவதாக தெரியவில்லை. இது, மிகவும் வேதனைக்குரிய விஷயம். 
எனவே, இது காதல் இல்லை; காமம். இத்தகைய நட்பு, 'அது' கிடைத்தவுடன், சே... என்றாகி விடும். பின்பு உன்னவர், நீ நினைத்து உருகும் அந்த ஹீரோ, மற்றுமொரு பூவை நோக்கி சென்று விட, நீயோ அதையே அல்லது அவரையே நினைத்து, புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான். காதல் என்பது, புரிந்து கொள்வது, விட்டுக் கொடுப்பது; எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துவது; மாஞ்சி மாஞ்சி மற்றவருக்கு உதவி செய்வது என்ற, நல்ல விஷயங்களை நீ படித்ததில்லையா? 
திருமணம் ஆன, 'உன்னவரிடம்' மேற்கூறியவைகளில், ஏதாவது ஒரு தகுதியாவது இருக்கிறதா? திருமணம் ஆகிவிட்ட உணர்வே இல்லாமல், உன்னிடமும், உன் தோழியிடமும் ஆபாசமாய் பேசி, செக்ஸ் உணர்சியைத் தூண்டி, படுக்கைக்கு அழைக்கும், 'உன்னவர்' எப்படிபட்டவர் என்று, இப்பொழுதாவது தெரிகிறதா? அவரது உள்நோக்கம் உனக்கு புரிகிறதா? 
அவனைப் பொறுத்தமட்டில், நீ கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி. இல்லை என்றாலும், கவலையில்லை. உன்னைப் போல, உன் தோழியைப் போல, நிறைய நண்பிகள் கிடைப்பர். அவனது குறிக்கோள், அவனுடைய செக்சுக்கு ஒரு வடிகால் தேவை. அவன் விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில், பெண்களை தொட்டுப் பேச ஒரு ஆள் தேவை. அவ்வளவுதான். 
இச்சூழலில் உன் மனதும், உடலும் சீராக, அமைதியாக இருக்க, என்ன செய்ய வேண்டும்... 
உடனே, அவனை மறக்க முடியாவிட்டாலும், சிறுக சிறுக, அவனை உன் ஆழ்மனத்திலிருந்து அகற்று. நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். கடந்தவைகளை நினைத்து, கவலைப்படுவதை தவிர். கண்களை மூடி, 'என்னுள் இருக்கும், அவனை, நான், என் நினைவுகளிலிருந்து தூக்கி எறிந்து விட்டேன். அவனால், என் வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை, ஏற்படுத்தவும் முடியாது...' என்று, அழுத்தம் திருத்தமாக, தினமும் கொஞ்ச நேரம் சொல்லிக் கொள். 
உன் மனதிடம், 'செக்ஸ் வாழ்க்கை, என் கணவன் மூலம் தான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்றும், வேறு எவருடனும் அல்ல...' என்று, அடிக்கடி சொல்லிக் கொள். 
எந்த காரணத்தைக் கொண்டும், எந்த சூழ்நிலையிலும், நீ தப்பு செய்து விட்டாய் என்று, எண்ண வேண்டாம். இதையே நினைத்துக் கொண்டிருந்தால், குற்ற உணர்வு வளர்ந்து, உன் மனம் வேதனைப்பட்டு, விபரீதமான எண்ணங்களை, உன் மூளை யோசிக்க ஆரம்பிக்கும். அது மிகப் பயங்கரமான விளைவுகளை உருவாக்கும். 
நீ பிறந்ததிலிருந்து, இன்று வரை, உன் பெற்றோரிடம் அன்பு செலுத்தி, பழகி இருந்திருக்கிறாய். எனவே, அவர்களை நண்பர்களாக பாவித்து, உன் நிறை, குறைகளை அவர்களிடம் சொல்லி, கலந்து ஆலோசித்து, நல்ல பையனாக பார்த்து, உனக்கு திருமணம் செய்து வைக்கச் சொல். இது உன் மனநிலையை வளப்படுத்தும். இவ்வாறு செய்வதில் கூச்சப்படத் தேவையில்லை. 
பெற்றோரிடம் பேச தயக்கமாக இருக்கிறது என்றால், நல்ல குடும்ப நல ஆலோசகரை அணுகி, உன் பிரச்னைகளை விளக்கி, ஆலோசனைகளைப் பெற முயற்சி செய்யலாம். 
மகளே... விரைவில், நீ நினைக்கிற மாதிரி, நல்ல கணவன் கிடைத்து, ஒரு ஒளிமயமான வாழ்க்கையை துவக்க வாழ்த்துகள். 

Saturday, January 4, 2014

கல்லூரியில் படிக்கும் மாணவி நான்...

கல்லூரியில் படிக்கும் மாணவி நான். பள்ளியில் படிக்கும் போது, நான் ஒருவரை காதலித்தேன். ஆனால், அது இனக்கவர்ச்சி என்று, இப்போது புரிந்து கொண்டேன். நானும், அவனும் காதலித்த காலத்தில், பல இடங்களில் சுற்றியுள்ளோம். இந்த விஷயம், வீட்டில் தெரிந்து, என்னை கண்டித்தனர். 
அப்பொழுதும் என் மனம், அவனையே நினைத்துக் கொண்டிருந்தது. மறுபடியும், அவனுடன், பல இடங்களில் சுற்றினேன். விஷயம், மீண்டும் என் வீட்டிற்கு தெரிய வந்து, பெற்றோர் கடுமையாக கண்டித்தனர். 
என் பெற்றோரை இழந்து விடுவோமோ என்ற பயத்தில், அவனை பிரிய நேரிட்டது. ஒருவகையில், அவனை பிரிந்தது நல்லதாக போயிற்று. அதற்கு பின் தான், அவனுக்கு, மற்ற பெண்களுடனும், தொடர்பு இருப்பது தெரிந்தது. இதற்காக, நான் என் பெற்றோருக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்ல வேண்டும். 
அவனுடன் பழகிய நாட்களில், என் உடம்பில், அவனது பெயரை, சூடு போட்டுக் கொண்டேன். எனக்கு, அப்போது அது பெரிய பிரச்னையாக தெரியவில்லை. ஆனால், அது எவ்வளவு பெரிய தவறு என்பதை, இப்போது உணர்கிறேன். என் வீட்டில் இது தெரிந்தால், மிகவும் வேதனைப்படுவர். தற்போது என் வீட்டில், மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 
இந்த விஷயத்தை, பெற்றோரிடம் சொல்ல முடியவில்லை. கணவனாக வருபவனிடமும் சொல்ல முடியாது; அதே சமயம் மறைக்கவும் முடியாது. என்னால், நிம்மதியாக இருக்க முடியவில்லை. இதற்கு, நீங்கள், ஒரு நல்ல பதிலைத் தர வேண்டும். தழும்பு மறைய வழி கூறுங்கள். 
ஒழுங்காக இருக்கும் பெண்களிடமே பல குறைகளை கண்டுபிடிக்கும் உலகத்தில், இப்படி ஒன்று இருப்பது தெரிந்தால், என்னாகும் என்றே சொல்ல முடியவில்லை. 
எனவே, உங்களிடம் எல்லாவற்றையும் மனம் விட்டு கூறிவிட்டேன். தயவு செய்து என் வாழ்க்கையின் நிம்மதிக்கு, ஒரு வழி கூறுங்கள். 
 இப்படிக்கு,
உங்கள் மகள். 


பிரியமான மகளுக்கு, 
உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன். உன் மனக் குமுறல்களை நன்கு உணர்கிறேன். 
'பள்ளியில் படிக்கும் போது ஏற்பட்ட காதல், வெறும் இனக்கவர்ச்சி என்பதைப் புரிந்து கொண்டேன்...' என, மிகத் தெளிவாக எழுதிய, உன்னை, நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். எல்லாப் பெண்களும் இந்த உண்மையைத் தெரிந்து, பிரச்னைகள் வருவதற்கு முன் விழித்துக் கொண்டால், இப்பருவத்தில் வரும் மன உளைச்சல்களில் இருந்து விடுபட்டு, அமைதியான வாழ்க்கை வாழலாம். 
இப்போது உனக்கு இருக்கும் ஒரே பிரச்னை, உன் உடம்பில் உன் காதலனின் பெயரை சூடு போட்டுக் கொண்டதும், அதனால் மாறாமல் இருக்கும் தழும்பும் தானே... உடம்பில் தழும்பு எந்த இடத்தில் இருக்கிறது என்று நீ குறிப்பிடவில்லை. பொதுவாக, உன்னை போன்ற பெண்கள், சூடு போட்டுக் கொள்ள, உடம்பின் மறைவான பகுதியை தான் தேர்வு செய்வர். 
நீ போட்டுக் கொண்ட சூடு, சாதாரணமாக இருக்கிறதா இல்லை மிக ஆழமாக இருக்கிறதா, சிறியதா, மிகப் பெரியதா போன்ற விபரங்கள் இல்லை. எது எப்படி இருப்பினும், நீ இது குறித்து, கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில், உன் பிரச்னைக்கு தீர்வு நிச்சயமாக உண்டு. 
முதலில் உணர்ச்சிவசப்படாமல், வெளிப்படையாக, உன் தழும்பு பற்றி உன் பெற்றோரிடம் கூறி விடு. 
நிச்சயமாக காதலனால் கெட்டுப் போகவில்லை; மனம் திருந்தி விட்டேன்; இடையில் ஏற்பட்ட, சின்ன சறுக்கலில் இருந்து, மீண்டு வர உங்களது உதவி தேவை என்று, மனம் விட்டு கேள். 
அவர்களின் துணையுடன், திறமையான, 'பிளாஸ்டிக் சர்ஜனை' அணுகி, முறையான சிகிச்சையின் மூலம், அவற்றை சரி செய்து விடலாம். 
இத்தழும்பு பற்றியோ, டாக்டரிடம் சென்ற விஷயம் குறித்தோ, நண்பிகள், உறவினர்கள் என்று யாரிடமும் எக்காரணத்தைக் கொண்டும் மூச்சு விடக் கூடாது. பிற்காலத்தில் இவர்கள் மூலம், உன் கணவருக்கு தெரிய வந்தால், விபரீதமான விளைவுகள் ஏற்படும். 
தன்னைத் தானே உடலாலும், மனதாலும் வருத்திக் கொண்டால் தான் பிரச்னைகளை தீரும் என்று, இனி, எக்காரணத்தைக் கொண்டும் நினைக்கக் கூடாது. 
பெண்கள், எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள் என்ற, இச்சமூகத்தின் சிந்தனையை மாற்றும் விதமாக, நீ நன்கு படித்து, பட்டம் பெற்று, நல்ல வேலையில் சேர்ந்து, கடினமாக உழைத்து, உன் குடும்பத்தை உயர் நிலைக்கு கொண்டு வர முயற்சி செய். 
ஒரு பெண் நினைத்தால், எதையும் செய்வாள் என்பதை நிரூபிக்க, இதுவே நல்ல தருணம். நீ வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகள்.