Sunday, February 2, 2014

உடலுறவின் அவசியம்...

என் வயது 65; என் மனைவியின் வயது 60. நாங்கள் நல்ல கவுரவமிக்க ஆதர்ச தம்பதியர்.
எங்களுக்கு பிள்ளைகளும் உள்ளனர். என் மனைவிக்கு மெனோபாஸ் பீரியட் முடிந்து, 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.
கடந்த, 10 ஆண்டுகளாக, என் மனைவி என்னை உடலுறவு கொள்ள அனுமதிப்பதில்லை; காரணம், ஆசார அனுஷ்டானம், நாள் கிழமை என, பல காரணங்கள் சொல்லி மறுக்கிறாள்.
எனவே, அவளுக்கு தக்க அறிவுரை தந்து, உடலுறவின் அவசியம் பற்றி அறிவுறுத்தி, வாரமலர் இதழ் மூலம் எங்களின் பிரச்னைக்கு வழி பிறக்க செய்ய வேண்டுகிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரன்.


அன்பு சகோதரருக்கு,
ரத்தின சுருக்கமான தங்களின் கடிதம் கண்டேன். 65 வயது சகோதரரின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 'செக்ஸ்' என்ற புனிதமான உறவைப் பற்றி பலருக்கும், பல விஷயங்களை எடுத்துரைக்க, உங்கள் கடிதம் ஒரு வாய்ப்பை தந்திருக்கிறது.
மிருகங்களுக்கு செக்ஸ் உணர்வை, ஹார்மோன்கள் தான் முடிவு செய்யும். தட்ப, வெப்ப நிலைக்கு ஏற்ப, வருடத்தில் சில மாதங்கள் ஹார்மோன்களால் தூண்டப்பட்டு, இனப் பெருக்கம் செய்கிறது.
பரிணாம வளர்ச்சியில், மிருகங்களுக்கு பின் வந்த மனித குரங்கு மற்றும் மனிதர்கள் ஹார்மோன்களின் இயக்கத்தில் அல்லாமல், மூளை மற்றும் நினைப்பினால் செக்ஸ் ஏற்படுத்திக் கொள்கின்றனர். எனவே, மனிதன் எப்பொழுதெல்லாம் நினைக்கிறானோ அல்லது மூளை கட்டளையிடுகிறதோ, அப்பொழுதெல்லாம் செக்சில் ஈடுபட முடியும்.
எனவே, உடலுறவு மற்ற செயல்களைப் போல, (சாப்பிடுவது, உறங்குவது, விளையாடுவது) மூளையால், கட்டுப்படுத்தப் பட்டு, வயது வித்தியாசம் இல்லாமல், உடல் உறவில் ஈடுபட முடியும் என்ற நிலை ஏற்படுகிறது.
பெண்களுக்கு பூப்பெய்த பின், மாதவிடாய் நிற்கும் வரை, உணர்வுகள் அதிகமாக இருக்கும். ஆனால், அதற்கு பின், அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் குறைகிறது. ஆனால், ஆண்களுக்கு இறக்கும் வரை, இந்த உணர்வுகள் இருக்கும்.
ஆண்களுக்கு நெஞ்சுவலி, சர்க்கரை, உப்பு சத்து, உடல்நலக் குறைவு, முதுகுவலி இருப்பின், உடல் உறவில் ஆர்வம் குறைய வாய்ப்பு அதிகம்.
பெண்களாக இருந்தால் மாதவிடாய் நின்று, பிறப்பு உறுப்புகள் சற்றே சுருங்கி, உலர்ந்து போய் விடும். எனவே, உடல் உறவு கொள்ளும் போது வலி ஏற்படும்.
அறுபது வயதிற்கு மேற்பட்டோர், 60 சதவீதத்திற்கு மேல், உடலுறவில், ஈடுபடுகின்றனர். மேலும், 20 சதவீத வயோதிகர்கள் ஆண்-பெண் வித்தியாசம் இல்லாமல், சுய இன்பத்தில் ஈடுபட்டு, தங்கள் ஆசைகளை தணித்துக் கொள்கின்றனர் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இருப்பினும், சில பெண்கள் உடலுறவில் ஈடுபடுவதையோ அல்லது சுய இன்பம் பெறுவதையோ, 'பாவமான செயல்' என நினைத்து, குற்ற உணர்வால் அவதிப்படுகின்றனர்.
இந்த வயதில் செக்சில் ஈடுபடாமல் இருப்பது தான், நாகரிகமான செயல்; இறைவனை அப்பொழுதுதான் அடைய முடியும் என நினைத்து, அமாவாசை, நாள், நட்சத்திரம், கிழமை என்றெல்லாம் சொல்லி செக்சை தவிர்க்கின்றனர். மேலும், குளித்து விட்டு வந்த பின்னோ, செக்ஸ்க்கு பின் குளிக்காமல் கோவிலுக்குச் செல்வதோ தவறு என்ற எண்ணங்களை கொண்டிருக்கின்றனர்.
சரி... நீங்கள் உங்கள் மனைவியிடம் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு சில ஆலோசனைகள்...
* உங்களின் செக்ஸ் விருப்பத்தை மனைவியிடம் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுவதுடன், மேலே கூறிய விவரங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, இந்த வயதில் செக்சில் ஈடுபடுவது தவறில்லை என விளக்கி, கூச்சத்தைப் போக்க வேண்டும்.
* செக்ஸ் என்பது உடலுறவு மாத்திரம் அல்ல... கணவன்-மனைவி ஆனந்தத்துடன் கட்டி தழுவுவது, முத்தமிடுவது, பழைய நினைவுகளை அசை போட்டுப் பார்ப்பதும் தான்.
* காலையில் இருந்தே பல்வேறு சூழல்களில், மனைவியிடம் தன் விருப்பத்தை, சிறு சிறு செயல்கள் மூலம் வெளிப்படுத்தி, அவரை தயார் படுத்தலாம்.
* பழைய மாதிரியில்லாமல், செக்ஸ் எண்ணிக்கையை குறைத்து, அவர்களை திருப்திபடுத்தலாம். அடிக்கடி உறவுக்கு அழைப்பது வெறுப்பையே உண்டு பண்ணும்.
* மனைவியின் உடல் பிரச்னைகளை கேட்டுத் தெரிந்து, அதன்படி நடப்பது நல்லது.
* உடலுறவின் போது வலியிருப்பின், மருந்து கடையில் க்ரீம்களை வாங்கி உபயோகப்படுத்த பயிற்சி தரலாம்.
* வயதாகிப் போனதால் நெஞ்சு வலி, மூச்சு வாங்குவது, முதுகுவலி, இடுப்பு வலி போன்றவை சிரமங்களை தரும் பட்சத்தில், உடலுறவு முறைகளை மாற்றி, செக்சை அனுபவிக்கலாம்.
* தேவையிருப்பின் செக்ஸ் ஆலோசகரை சந்தித்து, உடல்நிலை, மனநிலையை விவரமாகச் சொல்லி, பல உபயோகமான விவரங்களை பெறலாம்.
* உளவியல் நிபுணர்கள், மனநல மருத்துவர்கள் செய்த ஆய்வின் படி, வயதான தம்பதியர் சமச்சீராக செக்சில் ஈடுபட்டால், அவர்களின் வாழ்நாள் நீண்டு, சந்தோஷமாக இருப்பர் என்று கூறுகின்றனர். மேலும், விதவைகள் மற்றும் மனைவியை இழந்தவர்கள் பல்வேறு காரணங்களினால், குறிப்பாக செக்ஸ், கிடைக்காத காரணத்தினால், மிக விரைவில் இறந்து விடுவதாக கூறப்படுகிறது.
எனவே, மேற்கூறிய அனைத்து விஷயங்களையும், உங்கள் மனைவிக்கு பக்குவமாய் எடுத்துரைத்து, நீங்கள் சந்தோஷமாக நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ என் வாழ்த்துகள்.