Sunday, September 8, 2013

வெகு நாட்களாக என் பிரச்னை

அன்புள்ள சகோதரி —
வெகு நாட்களாக என் பிரச்னை பற்றி உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என் பிரச்னை கேலிக்குரியது... தயவு செய்து தப்பாக நினைக்காதே... என் வரையில் என் பிரச்னை அதிதீவிரமானது. உடனே தீர்வடையாவிட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போலிருக்கிறது. விஷயம் இதுதான்:
எனக்கு, 17 வயதில் திருமணம். கூட்டுக் குடும்பம். புகுந்த வீடு மிகவும் ஆச்சாரமானது... 18ல் தொடங்கி; வரிசையாய் நாலு குழந்தைகள். கணவருக்கு நான் தேவையாக இருக்கும் போதெல்லாம் ஒன்று பிரசவித்திருப்பேன், இல்லா விட்டால், சுத்தபத்தமாய் குளித்து முடித்து சமைத்துக் கொண்டிருப்பேன். இருந்தது ஒரு ஹால், ஒரு படுக்கையறை...
இரவு, 11:00 மணிக்கு மேல், மாமியார் அனுமதி கொடுத்ததும் தான் படுக்கையறைக்குள்ளேயே அடியெடுத்து வைக்க வேண்டும். அப்போது பார்த்து குழந்தை அழுது ஊரைக் கூட்டும். என் கணவருக்கு கோபமாய் வரும். "சனியனை எடுத்துட்டு வெளியிலப் போய் தொலை...' என்று கத்துவார்.
இப்படியே, என், 35 வயது வரை காலம் ஓடி விட்டது.
என் கணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. வருடத்துக்கு ஒருமுறைதான் வருவார். நான்தான் குழந்தைகளைப் படிக்க வைத்து, மாமியாரையும் கவனித்துக் கொண்டு இருந்தேன்.
சில வருடங்களுக்குப் பின் மாமனார், மாமியார் காலமாயினர். நாலு குழந்தைகளில் இரண்டு பேருக்கு திருமணமாகி, வெளியூரில் இருக்கின்றனர். இரண்டு பேர் வெளிநாட்டில் படிக்கின்றனர். இப்போது என் கணவர் ஓய்வு பெற்று வீட்டோடு இருக்கிறார். 
ஒரு சில கம்பெனிகளில் டைரக்டராக இருக்கிறார். கை நிறைய பணம்... தேவையானதை வாங்கலாம். அவர் என்னை ஒருநாளும் கட்டுப்படுத்தியதே இல்லை. 45ல் மாதவிலக்கு நின்றது. அப்போதெல்லாம் என்னுள் தாங்க முடியாத, "செக்சுவல் அர்ஜ்' இருந்தது. என் கோபத்தையும், அழுகையையும் வெளிக்காட்ட யாருமே இல்லாததால், எனக்குள் வைத்தே மறுகிப் போனேன்.
இப்போது கடந்த மூன்று வருடங்களாகத் தான் இவர் என்னுடன் இருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில், காலையில் பூஜை, கோவில்... மாலையில் கிளப், பைவ் ஸ்டார் ஓட்டல்களில் பிசினஸ் பார்ட்டி... இப்படி போய் கொண்டிருக்கிறது!
நாற்பத்தியைந்து வயதில் நான் நினைத்ததுண்டு... விடிகாலையில் எங்கிருந்தாவது ஒரு தேவகுமாரன் வந்து, என் தாபத்தை தீர்த்து விட்டு போக மாட்டானா என்று!
இப்போது ஐம்பதிலும் என் மனம் இளமையாக இருக்கிறது... கணவருடன் சேர்ந்து படுப்பதுதான் இல்லை என்றாலும், அவரது அன்பான சொல், அரவணைப்பு, "இத்தனை நாளும் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாய்' என்கிற பரிவான விசாரிப்பு... இது கிடைத்தால் போதும். ஆனால், அவரோ இதை ஒரு நாளும் பொருட்படுத்தியது இல்லை.
நீயே சொல்... இவர், இவரது, இளமைப் பருவத்தில் எங்கெங்கு இருந்தாரோ, அங்கெல்லாம் தேவைப்பட்ட போது தன் உடற்பசியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்... இது பற்றி நண்பர்களுடன் சிரித்து பேசும் போதெல்லாம் தமாஷாகக் கூறி, என்னைப் பார்த்து கண் சிமிட்டுவார்...
இப்பக் கூட என் மன உளைச்சல் தாங்காமல் எல்லார்கிட்டேயும் எரிந்து விழுகிறேன். வீட்டில் நிம்மதியே இல்லை. என் கணவரைப் பார்க்கும் போது மட்டுமில்லை, அவர் சம்பந்தப்பட்ட சட்டை, செருப்பு, வாட்ச் எதைப் பார்த்தாலும் நார் நாராகக் கிழித்து, தூக்கிப் போட்டு உடைக்க வேண்டும் போல் இருக்கிறது. 
என் பிரச்னைக்கு நீதான் பதில் தர வேண்டும். 
இப்படிக்கு
— அன்பு சகோதரி.

அன்பு சகோதரிக்கு—
தேவையானபோது, "செக்ஸ்' வைத்துக் கொள்ள முடியாமல், பிறகு அதற்கு சமயமும், சந்தர்ப்பமும் கிடைக்கும்போது, ஒரே வீட்டில், இருவேறு படுக்கையறையில் படுத்திருக்கும் அவலம் கஷ்டமானதுதான்; புரிகிறது.
ஐம்பது வயதானாலும் மனசை பொறுத்த வரையில் இளமையாகவே இருப்பதாகவே எழுதியிருக்கிறாய்.
முதலில் என் பாராட்டுகள். இந்த காலத்தில் ஒரு பிள்ளை பெற்று, 25 வயசு முடிவதற்குள்ளாகவே எல்லாம் முடிந்து விட்டதாக நினைத்து, பெண்கள், தங்களை கவனித்துக் கொள்ளாமல், "புஸ்' சென்று உப்பியோ, குச்சியாய் இளைத்தோ போகின்றனர்.
பல ஆண்பிள்ளைகளுக்கு பெண்ணின் மனசைப் படித்தறியும் சமர்த்துப் போதாது. தனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று தேடித் தேடி போவரே தவிர, தாலி கட்டியவளுக்கு எது வேண்டும் என்று கேட்கத் தெரியாது. அப் பேர்ப்பட்ட புத்திசாலிகளுக்கு, நாம்தான் நம் தேவையைக் கோடிட்டு காட்ட வேண்டும்.
பிறந்த நாள், திருமண நாள் என்றால், பரஸ்பரம் வாழ்த்து அட்டை அனுப்பி, குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு அட்டை என்றால், தனியாக - அந்தரங்கமாக, மெல்லிய, கிளர்ச்சியூட்டும் வார்த்தைகளுடன் இன்னொரு வாழ்த்து அட்டையை அனுப்பி, உங்களது கட்டில் உறவை சாகாமல் வைத்திருக்கலாமே!
"அவர் வரையில் அவர் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டார்... இனி மேல் அவருக்கு எதுவும் தேவையில்லை. என்னையும் அப்படியே நினைக்கிறார்...' என எழுதியிருக்கிறாய்.
உனக்கு எதுவும் தேவையில்லை என்பதை அவர் அறிந்து கொண்டது எப்படி? உன் நடையுடை பாவனை, விட்டேற்றியானப் பேச்சு, எரிச்சலில் வீட்டு வேலைக்காரிகளிடம் கத்துவது, அவரது சினேகிதர்களைக் கண்டால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வது... இப்படித்தானே!
என்றோ வெளிநாட்டில் பழகிய பெண்கள் அவரது மனசில் இடம் பிடித்திருக்கின்றனர் என்றால், உன்னால் அது முடியாதா?
"இத்தனை வயசுக்கு மேல் புருஷனை மயக்கித்தான் இல்லறம் நடத்த வேண்டுமா...' என்று கேட்டால், என்னைப் பொறுத்தவரையில், அவசியமில்லை என்று தான் நான் சொல்வேன். காரணம், அது என்னுடைய மனப்பாங்கு. "போடா' என்று ஒரு நிமிஷத்தில் உதறிவிட்டு போய்விடலாம் - நானாக இருந்தால்.
ஆனால், இது உன்னைப் பொறுத்த விஷயம், உனக்கு கணவனின் அன்பும், அரவணைப்பும் தேவை. இல்லாவிட்டால் அவள், புருஷனின் சட்டையைக் கிழிப்பாள்; வாட்ச்சை உடைப்பாள்; டைஜின் மருந்துடன் பேதி மருந்தைக் கலந்து வைப்பாள். எப்படியோ தன் கொந்தளிக்கும் மனசுக்கு ஒரு வடிகாலைத் தேட முயற்சிப்பாள்... அப்படித்தானே!
ப்ளீஸ்... இது உன்னையே சிதைத்துக் கொள்ளும் விஷயம். ஒன்று செய்... உன் உடைகளில் கவனம் செலுத்து. உன் சினேகிதிகளிடம், உன் அவரை விடவும் ஜோராக, "ஜோக்' அடித்துப் பேசு. 
இன்றைய நாட்டு நடப்பிலிருந்து, சினிமா, நாட்டியம், சங்கீதம் என்று சகலத்தைப் பற்றியும், "டாப் டு பாட்டம்' பேசக் கற்றுக் கொள். முடிந்தால் , மூன்று மாதம் போல, வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளோடு போய் இருந்து விட்டு வா.
கணவர் பூஜைக்கு உட்காரும் முன், நீ அதே சாமிப் படத்தின் முன் கண் மூடி உட்கார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வீட்டு நாய் குட்டியை கொஞ்சு. அவரது நண்பர்களிடம் சரளமாய் பேசு. அவர் கேட்கும் முன்பே வீட்டுக்குள்ளேயே சின்னதாய் பார்ட்டி வைத்து இன்ப அதிர்ச்சிக் கொடு.
எப்போதுமே, நீ உன்னைப் புதுப் பொலிவுடன் வைத்துக் கொள். அவர், தன் தலையணையைத் தூக்கிக் கொண்டு, "உன் பெட்ரூமில் இன்னிக்கு நானும் படுத்துக்கலாமா...' என்று கேட்டால், உடனே, "வித் பிளஷர்' என்று கூறி விடாமல், கொஞ்சம் யோசித்து, "இன்னிக்கு மட்டும்தான்' என்று கூறு... நாளைக்கும் கேட்டால், அப்போது இன்னொரு, "இன்னிக்கு மட்டும் தான்' என்று சொல்லிக் கொள்ளலாம்.
நீ மனசு வைத்தால் எல்லாம் நல்லதாய் நடக்கும்.
அடுத்து வரும் சந்தோஷ நாட்களில் என்னை மறந்து விடாதே! 

Tuesday, September 3, 2013

நான் 23 வயது பெண்

அன்புள்ள அம்மாவிற்கு — 
நான் 23 வயது பெண். எனக்கு இரண்டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உண்டு. நான் ஓர் அனாதை. நான் விடுதியில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தபோது, இரக்க முள்ள ஒரு மனிதர் என்னைப் பார்த்து அனுதாபப்பட்டு, "திருமணம் செய்து கொள் கிறேன்...' எனக் கூறி அழைத்து வந்தார்.
அவரைப் பற்றி அங்குள்ளவர்களிடம் கேட்டேன்... அனைவரும் அவரை, "நல்லவர்' என்று கூறினர். எனக்கு படிப்பறிவு இல்லை. அப்போது அவர் வயது 35. என் வயது 17. "என்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என அழைத்து வந்தவர், மூன்று குழந்தைகள் பிறந்த பின்பும் திருமணம் செய்யவில்லை. அவர் செல் வந்தர்; என்னை நல்ல முறை யில் வைத்திருந்தார்.
எனக்கு ஒரு குழந்தை பிறந்த பின் தான் தெரியும், அவருக்கு ஏற்கனவே மணமாகி முதல் மனைவியும், மூன்று குழந்தை கள் உண்டு என்று. அவர்களுக்கு தெரியாமல், என்னை தனி வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். எங்கள் விஷயம் தெரிந்தவுடன், அவர்கள் வீட்டினர் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கிவிட்டு, "அவளை விட்டு விலகி வந்தால் இங்கு இரு, இல்லாவிட்டால் நீ வேண்டாம்...' என கூறி விட்டனர். அவர் என்னிடம் இருந்து விட்டார். ஏழு வருடங்கள் ஆகிறது. என்னை நன்றாக வைத்திருந்தார். எங்களிருவருக்கிடையே இருந்த அளவுகடந்த அன்பினால், குடும்ப கஷ்டம் பெரிதாக தெரியவில்லை.
என் பிரச்னை...
தற்போது அவரிடம் நிறைய மாற்றங்கள். நான் தற்கொலை செய்ய முயன்ற போது என்னை காப்பாற்றி, சமாதானப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். தற்போது என்னை கண்டாலே அவருக்கு பிடிக்கவில்லை; குழந்தைகளையும் கவனிப்பதில்லை. இப்போது, அவர் 15 வயதுள்ள பெண் ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளார். பணம் கொடுப்பதில்லை. வீட்டிற்கு சரியாக வருவதில்லை. கேட்டால், "நான் ஆம்பிளை, எப்படி வேண்டுமானலும் இருப்பேன். எது வேண்டு மானாலும் செய்வேன். நீ கேட்கக் கூடாது...' என்கிறார்.
இப்போது தகாத நண்பர்களின் சேர்க்கை வேறு அவருக்கு. அவர் நண்பர்கள் சொல்படி இப்போது அப் பெண்ணிடம் வாழ்ந்து வருகிறார். எனக்கு எந்த தொழிலும் தெரியாது; படிக்கவில்லை; குழந்தைகளை பராமரிக்க யாருமில்லாததால், வேலைக்கும் செல்லவில்லை.
ஒன்றரை வயது கைக்குழந்தை வேறு உள்ளது. தங்களின் ஆலோ சனைக்காக காத்திருக்கிறேன். அவர் என்னை விட்டு விலகி செல்ல திட்டம் போட்டுக் கொண்டிருக் கிறார். நான் கஷ்டப்பட்டு வாங்கிய பொருட்கள் மற்றும் துணி முதற் கொண்டு எடுத்துச் செல்கிறார். அருகில் இருப்பவர்கள், "பொறுமை யாக இரு' என்கின்றனர். தாங்கள் தான் எனக்கு நல்ல பதில் தர வேண்டும்.
— அன்பு மகள்.

அன்பு மகளுக்கு — 
உன் கடிதம் கண்டேன். உனது நிலை கண்டு மிகவும் வருத்தப் படுகிறேன். நீ படிப்பறிவு இல்லாதவளாக, அனாதையாக இருக்கலாம். ஆனால், எது நல்லது - எது கெட்டது என்று பகுத்தறியும் அறிவு இல்லாதவளாக இருந்து விட்டாயே என்பதுதான் என் வருத்தம். 17 வயதில் உனக்கு உலக அனுபவம் இல்லாமல் இருந்திருக்கலாம்.
ஆனால், இப்போதும் அப்படியே இருப்பது தப்பு கண்ணம்மா. எப்போது உன்னை மணப்பதாகக் கூறி அழைத்து வந்தவர் ஏற்கனவே திருமணமாகி, மனைவி, குழந்தைகளோடு இருக்கின்றார் என்பது உனக்குத் தெரிய வந்ததோ - அப்போதே ஒரு குழந்தை பிறந்த கையோடு - போதும் இவருடன் வாழ்ந்த வாழ்க்கை என்று நீ வெளியேறி இருக்க வேண்டும். எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இரண்டு, மூன்று என, பெற்றுக் கொண்டே போனாய்?
நீ தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது, அவர் காப்பாற்றி, சமாதானப்படுத்தி, திருமணம் செய்து கொண்டார் என்று எழுதியிருக் கிறாய். காப்பாற்றி, சமாதானப் படுத்தி உனக்கென்ற நல்ல துணை வரைத் தேடி, திருமணம் செய்து வைத்திருந்தாலோ அல்லது உனக்கென ஏதாவது தொழிற் கல்விக்கு ஏற்பாடு செய்திருந்தாலோ அது நல்ல மனிதனுக்கு அடை யாளம்!
திருமணம் செய்து கொள்வது, அதுவும் முப்பத்தைந்து வயதில், பதினேழு வயதுப் பெண்ணை மணப்பது, எந்த விதத்தில் நியாயம்? இதிலிருந்தே அந்த மனிதரின் சுயநலம் தெரியவில்லை?
மற்றவர்கள், அதாவது, அருகில் இருப்பவர்கள், "பொறுமையாக இரு' என்று சொல்கின்றனர் என்றால், சட்டப்படியோ, வேறு விதமாகவோ நீ எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதினால் தான். நிஜத்தில், நீ அந்த மனிதரின் சட்டபூர்வமான, மனைவி இல்லை; கூட்டி வந்து வைத்திருக்கிறார்.
விரட்டி விட்டால் தட்டிக் கேட்கவோ, வேறு நடவடிக்கை எடுக்கவோ உனக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. இதை நான் சொல்ல மிகவும் வருத்தப் படுகிறேன். மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியிருக்கிறாய் கண்ணம்மா. இனிமேலாவது விழித்துக் கொள். போதும் இந்த ஆளுடன் நீ வாழ்ந்தது. நாலாவது ஒன்று வயிற்றில் வரும் முன், இந்த உறுதியில்லாத வாழ்க்கையை உதறு. மறுபடியும் ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் வேலை கிடைத்தாலும் கூட பரவாயில்லை. உன் குழந்தை களுடன் கிளம்பி, இது போன்ற இல்லத்தில் தங்க முடியுமா என்று பார்.
அதன்பின் ஏதாவது ஒரு தொழிலை, அது சமையல் தொழிலானாலும் சரி - முறையாக, நேர்த்தியாகக் கற்றுக் கொள். படித்தவர்களுக்குத்தான் இந்த நாட்டில் வேலை கிடைக்கும் என்கிற, சித்தாந்தத்தை மாற்று... எந்தவொரு வேலையும் மட்டமில்லை.
உன் குழந்தைகள் - தங்களது நிலையை உணர்ந்து, உள்ளுக்குள்ளேயே வெந்து, குமையத் துவங்கும் முன், உனக்கென ஒரு பாதை அமைத்துக் கொள். எத்தனையோ மருத்துவமனைகளில் ஆயா வேலை, வீடுகளில் குழந்தை களைப் பார்த்துக் கொள்ளும் வேலை, கூட்டிப் பெருக்கும் வேலை... இப்படி எதுவோ ஒன்று... நாலு வீடுகளில் காலையில் இட்லி, வடை சுட்டுக் கொண்டு போய் விற்றாவது பிழைப்பை நடத்து... கவுரவமாக இருக்கும்.
இனி, இவரை நம்பி, வாழ்நாளை வீணாக்காதே!