Saturday, November 8, 2014

மூர்க்கத்தனமாக அணைத்து, படுக்கையில் தள்ளி முத்தமழை பொழிந்தார்

என் வயது 29; சிவந்த, அழகான எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத பையன். ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளர் பணியில் உள்ளேன். என் சொந்த ஊரில், என் குடும்பத்திற்கு நல்ல மதிப்பு உண்டு. இங்கு, சொந்தமாக பிளாட் வாங்கி வசித்து வருகிறேன். என் அப்பா ஆண்டிற்கு, இரண்டு, மூன்று முறை, ஒரு வாரம், பத்து நாள் வந்து செல்வார். மற்றபடி என் அம்மா, அப்பா சொந்த ஊரில் உள்ளனர். நான், வாழ்க்கை மற்றும் பணி முன்னேற்றம் காரணமாக, 30 வயது வரை திருமணத்திற்கு காத்திருக்க முடிவு செய்திருந்தேன்.
என் பக்கத்து பிளாட்டில், ஒரு தம்பதியர் வாடகைக்கு குடி வந்தனர். அந்த பெண்ணிற்கு, 25 வயது இருக்கும்; அவர் கணவருக்கு, 30 வயது இருக்கும். 2013ல் அவர் வேலை காரணமாக வெளிநாட்டிற்கு சென்று விட்டார். அவர் போகும்போது தன் மனைவி எம்.எஸ்சி., முடித்து, பி.எட்., தபாலில் படிப்பதாகவும், படிப்பு முடிந்தவுடன் அங்கு கூட்டி செல்ல விரும்புவதாகவும் கூறினார். அந்த பெண்ணின் வேண்டுதலின்படி, மாதத்தில் ஒன்று, இரண்டு தடவை வங்கி சேவை மற்றும் இதர வெளி உதவிகள் செய்வது உண்டு. எங்கள் பகுதியில் முன் இரவு நேரத்தில், அடிக்கடி மின்சாரம் தடைப்படும். அந்த நேரத்தில் மொட்டை மாடியில் அமருவேன்; அந்த பெண்ணும் வருவார். நாங்கள் பலதடவை மணிக்கணக்கில் பலதரப்பட்ட பொது விஷயங்களை பேசுவோம். ஞாயிறு இரவும், இது போல் இரண்டு மணி நேரம் மொட்டை மாடியில் பேசுவோம்; சிலநேரம் எங்கள் பேச்சில் மற்ற வீட்டுக்காரர்களும் சேர்ந்து கொள்வர். ஒரு நாளும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசியது இல்லை.
ஆறு மாதத்திற்கு முன், ஒரு நாள் மதியம், நான் வெளியில் சென்று திரும்பி என் வீட்டு கதவை திறக்கும்போது, அந்த பெண், டீ சாப்பிட கூப்பிட்டார். அவர்கள் வீட்டில் பெட் ரூமில் தான், 'ஏசி' உள்ளது. அதனால், அங்கே நாற்காலி போட்டு டீ, பிஸ்கட் கொண்டு வந்தார். நான் சாப்பிட்டு முடித்து, பேசிக்கொண்டு இருந்தபோது, சற்றும் எதிர்பாராவிதமாக என்னை மூர்க்கத்தனமாக அணைத்து, படுக்கையில் தள்ளி முத்தமழை பொழிந்தார்.
அவரின் பிடியில், நான் என்னை முழுவது மாக இழந்தேன். மேற்கண்ட நிகழ்ச்சி நடக்கும் வரை, என் சுண்டுவிரல் கூட ஒரு பெண்ணின்மீது பட்டது இல்லை. அது முதல், அவளின் பிடியிலேயே இருக்கிறேன்; அவள் எண்ணப்படியே நடக்கிறேன். இதனால், என் பணி பாதிக்கிறது; அலுவலக வேலைதிறன் குறைகிறது. இது குறித்து, அந்தப் பெண்ணிடம், இந்த தொடர்பு இருவர் நலத்திற்கும் பாதிப்பு வரும் என்றும், என் அலுவலகத்தில் பணித்திறமை குறைந்தால், முன்னேற்றம் குறையும்; என் சொந்த வாழ்க்கையும் பாதிக்கப்படும். மேலும், அக்கம் பக்கத்தில் நம் மதிப்பு குறையும் என, பலவாறாக எடுத்து சொன்னேன். அவள் எதையும் காதில் வாங்குவதாக இல்லை. 
அவள் கணவர் அவளுக்கு பொருத்தமானவர் இல்லை; நான்தான் அவளுக்கு முழுமையான வாழ்க்கை அளிக்க கூடியவன் என்றும், நாம் வேறு எங்காவது சென்று, வாழ்க்கை நடத்தலாம் என, தொந்தரவு செய்கிறார். இதை ஏற்றுக்கொள்ளாவிடில் தற்கொலை செய்துகொள் வதாக மிரட்டுகிறார். இதனால் ஏற்படும் மன உளைச்சலில், என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை; வேலையில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. என் பெற்றோரிடம் போனில் சரிவர பேசுவது இல்லை. அவர்களும் மிகவும் கவலைப்படுகின்றனர். இதற்கு இடையில், நான் அவளின் தேவைகளை பூர்த்தி செய்ய மறுத்தால், பிளாக்மெயில் செய்து நிறைவேற்றிக்கொள்கிறாள்.
இதனால், சில நேரம் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் வருகிறது. வீட்டை காலி செய்யலாம் என்றால், அவளுக்கு தெரியாமல் முடியாது; பணி மாற்றத்திற்கும் வழி இல்லை.
அக்கா, தயவு செய்து என்னை அவளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள ஒரு நல்ல வழி சொல்லுங்கள். அதே சமயம் அவளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு, சமயோசிதமான வழிகாட்டி, இரு உயிர்களை காப்பாற்றுமாறு வேண்டுகிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகன்.


அன்பு தம்பிக்கு,
பணிமுன்னேற்றத்துக்காக உன் திருமணத்தை, முப்பது வயது வரை நீ தள்ளிப்போட்டது மாபெரும் முட்டாள்தனம். பெரும்பாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மணமானோரே தத்தம் குழந்தைகளுடன் வசிப்பர். விதிவிலக்காக தன்னந்தனியனான நீ, சகலவசதிகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறாய். பொதுவாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தாம்பத்யம் திருப்தியாக கிடைக்காத பெண்கள் நான்கைந்துபேர் இருப்பர். அவர்களில் ஒருவர் வேலி தாண்ட துணிவார். துணியும் அந்த பெண்ணுக்கு, பொருத்தமான இரையாக நீ காணக்கிடைக்கிறாய். உன்னைப் போல, கன்னிப்பையன்கள் இரையாக கிடைப்பது, அரிதிலும் அரிதான விஷயம்.
கணவர் வெளி நாட்டுக்கு போய்விட்டார். பக்கத்து பிளாட்டில், அழகான, எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத பையன் இருக்கிறான். பையன் மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜக்ட்ஸ் ஆக பேசுகிறான். அவனுடன் பேசிபேசி, அவனுக்கு இணக்கமான தோழி ஆகி விட்டோம். அவன் முதலில் தன் ஆசையை வெளிக்காட்டட் டும் என, பலநாள் காத்திருந்தாகி விட்டது. கடைசி உபாயமாக, நாம் அவன் மீது பாய்ந்து இரை எடுப்போம் என, துணிந்து விட்டாள்.
பக்கத்து பிளாட்டில் ஒரு எண்பது வயது கிழவி இருந்திருந்தால் அவளுடன் தினம் இரண்டு மணிநேரம் ஊர்கதை, உலகத்து கதை பேசியிருப்பாயா? மாட்டாய். உன் ஆழ்மனம் அவளது அருகாமையை விரும்பி இருக்கிறது. அவளை சகலவிதமாயும், வசீகரிக்க விரும்பியுள்ளாய். நீ அவளுக்கும், அவள் உனக்கும் பரஸ்பரம் தூண்டில் போட்டுள்ளீர்கள். இருவருமே எதிர்எதிர் தூண்டில்களில் சிக்கிக் கொண்டீர்கள். உறவுக்கு பின், நீ அவளை முழுக்க முழுக்க குற்றம் சாட்டுவது நியாயமற்ற செயல்.
பசியோடு இருந்தவளுக்கு விருந்து படைத்து விட்டாய். சாப்பிட்ட ருசி, நாக்கிலேயே தங்கியிருக்கும். மீண்டும் மீண்டும் விருந்துண்ணவும், விருந்து தனக்கே தனக்கு மட்டும் பரிமாறபடவும் ஆவல் கொள்கிறாள். வழியில் போன எபோலா வைரசை எடுத்து, மடியில் இட்டுக் கொண்ட கதைதான் உன் கதை. திகட்ட திகட்ட அதிரடியான தாம்பத்யம் கிடைத்த பின், மனமும், உடலும் ஒரு மந்தநிலையிலேயே திளைத்து கிடக்கும். விளைவு, பணி பாதிப்படையும், உணவு பழக்கவழக்கம் மாறும்; உறவுமுறை பேணல் தடுமாறும், அத்தனையும் உனக்கு நடக்கிறது.
பிளாட்டை ஒரே இரவில் காலி செய்து, 
20 கி.மீ., தூரத்தில் ஏதாவது ஒரு பிளாட்டுக்கு வாடகைக்கு போ. உன் பிளாட்டை வாடகைக்கு விட்டு விடு. வெளிநாட்டில் இருக்கும் அவளது கணவனுக்கு, பெயரில்லாத கடிதம் எழுது. உன் மனைவி தவறு செய்து கொண்டிருக்கிறாள். உடனே இந்தியா திரும்பு, அல்லது அவளை அழைத்து போய்விடு என, யோசனை கூறு. இந்த கள்ளஉறவின் பாதகங்களை முழுமையாக விளக்கி, அந்த பெண்ணுக்கு கடிதம் எழுது. உருக்கமான பிரியா விடையாய் அமையட்டும் உன் கடிதம்.
பதினைந்து நாள் அல்லது ஒரு யமாதம் விடுமுறை போட்டுவிட்டு, பெற்றோருடன் போய் தங்கு. பெற்றோரை போர்க்கால அவசரமாய் வரன் பார்க்கச் சொல்லி, திருமணம் செய்து கொள்.
வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப் போகும் நீ, தற்கொலை பற்றி யோசிக்கலாமா? கள்ளக்காதலில் கிடைத்த உறவையும், மனைவி மூலம் கிடைக்கும் உறவையும் ஒப்பிட்டு பார்க்காதே. திருட்டு மாங்காய்க்கு சுவை அதிகம். மாங்காய் திருடியதற்கு வழங்கப்படும் தண்டனையை நினைத்தால் ருசி உணர்வு மட்டுப்படும். உன் உன்னதமான திருமண வாழ்வுக்கு, 'அட்வான்ஸ' வாழ்த்துகள்.
என்றென்றும் தாய்மையுடன் 
.

No comments:

Post a Comment