Saturday, August 10, 2013

அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு—
தங்கள் முகம் தெரியாத மகள் எழுதுவது. எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம். என்னுடன் பிறந்தவர்கள் இரு அண்ணன்; ஒரு தம்பி. நான் ஒரே பெண். இப்போது, என் வயது 17. என் 12வது வயதில் ஒருவரை நேசித்தாள் என் வயது டைய உறவுக்கார பெண் ஒருத்தி. தன் காதலைப் பற்றி தினமும் என்னிடம் கூறுவாள் .
அந்தக் கதைகளை கேட்டதால், அந்த வயதில் எனக்கு, "வருங்காலத்தில் நாமும் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்ற எண்ணம் வரும். காதல் வீட்டிற்கு தெரிய, அந்த பையனை என் கண் எதிரிலேயே அடித்தான் அவள் அண்ணன். அதை பார்த்த எனக்கு, காய்ச்சலே வந்துவிட்டது.
என் 15வது வயதில் என் மாமாவின் மகனை கண்டபோது... "ஏன் இவரை என் வாழ்க்கை துணைவராக தேர்ந்து எடுக்கக்கூடாது...' என்று நினைத்தேன். அந்த நேரத்தில் என் உறவுக்காரப் பெண்ணுக்கு, வேறு ஒருவரோடு திருமணம் நடந்தது. என் வீட்டில் ஜாதகம் பார்த்தனர். அதில் எனக்கு சொந்தத்தில் திருமணம் நடக்காது என்று தெரிந்தது.
என் மனதை மாற்றிக் கொண்டேன். என் வீட்டு பக்கத்தில் துணிக்கடை வைத்திருந்தார் முஸ்லீம் ஒருவர்; அவருக்கு மூன்று சகோதரர்கள். அவர்கள் அனைவரும் என்னை, "தங்கை' என்று கூறுவர்.
ஆனால், கடைசியில் பிறந்தவர் என்னை பெயர் வைத்துதான் அழைப்பார். அவரை, என் மனசுக்குள் நேசித்தேன்; ஆனால், வெளியே கூறவில்லை. காரணம், "இந்த வயதில் இவளுக்கு இது தேவையா...' என அவர் நினைத்தால்...
ஆனால், அவர் என்னிடம் பலமுறை கடிதங்கள் கொடுத்து இருக் கிறார். நான் ஒரு முறை கூட வாங்கவில்லை; மனதில் ஒரு பயம். ஒரு முறை, "எந்த முறையில் திருமணம் செய்து கொள்வோம்...' என்றார். விளையாட்டாக கேட்கிறார் என நினைத்து, "கிறிஸ்தவ முறையில் செய்து கொள் வோம்...' என்று கூறினேன்.
அதை கேட்டு நான் காதலிக்கிறேன் என்பதை அறிந்து, இவை அனைத் தையும், அவர், பக்கத்து வீட்டு அக்கா விடம் கூறிவிட்டார். அது மட்டுமன்றி, "நாம் இரு வரும் ஓடி போலாமா...' என்று நான் கேட்டதாக, அதிகமாக சேர்த்து கூறி விட்டார்.
என்னை அழைத்து, "இவ்வாறு செய்கிறாயா...' என்று அந்த அக்கா கேட்க, "நீங்கள் கூறுவது போன்று எனக்கு யாரையும் தெரியாது...' என்று கூறி விட்டேன். அதற்கு பின், என் மனதுக்குள் உள்ளவர் என்னிடம் முன்பு போல் பேசவில்லை; நான் சிரித்தால் கூட சிரிப்பது கிடையாது.
ஆனால், இப்போதுதான் அவர் மீது அதிகமாக காதல் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். ஏன் என்றால், அவரை ஒரு நாள் பார்க்காமல் இருந்தாலும், என் மனம் பதறி விடுகிறது. அவர் முஸ்லீம்; நான் இந்து. துணிந்து காதலை வெளிபடுத்தி விடவா... வெளிபடுத்தினால் இது நிறைவேறுமா; இல்லை வேறு ஏதாவது சிக்கல் வந்துவிடுமோ என்று பயமாகவும், குழப்பமாகவும் உள்ளது.
இதனால், என் படிப்பும் தடைபடுகிறது. முன்பு என் மார்க் 90 சதவீதம்; ஆனால், இப்போது 43 சதவீதம் தான். எனக்கு ஒரு நல்ல பதிலை தருமாறு மிகவும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் பதிலை எதிர்பார்க்கும் மகள்.


அன்பு மகளுக்கு—
உன் கடிதம் படித்தேன்.
இப்பொழுதெல்லாம் இதுபோன்ற பிஞ்சிலேயே பழுத்த காதல் கதைகளையே கடிதங்களில் பார்த்து மிகவும் வருத்தத்துடன் எழுதுகிறேன்... எத்தனை இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் எழுதியிருக்கிறேன். அலுக்காமல், சலிக்காமல் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
எனக்கெல்லாம் காதல் என்றால் என்னவென்றே தெரியாது உன் வயசில். நிறைய புத்தகம் படிப்போம்; அதில் வரும் காதல் உன்னதமாக இருக்கும். நிறைய பாட்டு பாடுவோம்; சக சிநேகிதிகளுடன் போட்டி போட்டு எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்வோம். அதைப் பற்றியே கனவு காண்போம்.
அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களிடமே அநாவசியமாய் பேச்சு வைத்துக் கொள்ளத் தயங்குவோம். அப்படியிருக்க, அதிகம் பழக்கமில்லாத ஆணுடன் பேசினால், எங்கள் வீட்டுப் பெரியவர்கள், எங்களை, "பெண்டு' நிமிர்த்தி விடுவர்.
"இவர் தான் உன் கணவர்' என்று பெரியவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, முறையாய் தாலி கட்டியவரிடம் கூட, சரளமாய் பேச பல மாதங்கள் ஆகும்.
"ஆணுக்குப் பெண் சமம்' என்பதை நாங்களும் அறிந்திருந்தோம். ஆனால், இப்படி கடிதம் கொடுப்பதிலும், மனசைக் கண்டபடி அலைக்கழிய விடுவதிலும், ஆணுக்குப் பெண் சமம் என்று நாங்கள் நினைத்ததே இல்லை.
ஒவ்வொரு சமயம் பார்க்கும் போது,"டிவி'யும், பத்திரிகைகளும் மட்டுமல்லாது, இக்காலப் பெற்றவர்களே தங்கள் குழந்தைகள் வீணாவதற்கு ஒரு காரணமோ என்று தோன்றுகிறது.
முஸ்லீமோ, இந்துவோ... பிரச்னை அது அல்ல சின்னப் பெண்ணே... நீ இன்னும் முற்றாதத் தளிர். எந்த விதக் குழப்பமும் இல்லாமல் படிக்க வேண்டிய வயசு. இது போன்ற வயசுகளில்தான் மிக மிக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். 15 வயதில் மாமன் மகன்... இப்போது 17ல் பக்கத்துக் கடை முஸ்லீம் இளைஞர்... "யாரையாவது காதலித்து, மனசையும், படிப்பையும் பாழாக்கிக் கொண்டால் தான் ஆச்சு...' என்று ஏதாவது சபதம் எடுத்திருக்கிறாயா?
உனக்கு இன்னும் காலம் இருக்கிறது. நன்றாக படித்து, நல்ல வேலையில் அமர்ந்து, உற்றாரும், ஊரும், நாடும் போற்றும் வண்ணம் உயரலாம்.
இன்றைக்கு விளையாட்டாய், "அவளும் என்னை, "லவ்' செய்றா... ரெண்டு பேரும் ஒடிப் போயிடலாமான்னு கேட்டா...' என்று அந்த இளைஞர், தன் பக்கத்து வீட்டு அக்காவிடம் சொன்ன சொல், நாளைக்கு உன் வெற்றிப்பாதையில் நெருஞ்சி முள்ளாய் இருந்தால்... என்ன ஆகும்.
காதலித்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்தால், முதலில் படிப்பை முடி. உன்னை, உன் அழகுக் காகவோ, இளமைக்காகவோ, உன் பெற்றோர் தரும் சீதனத்துக்காகவோ, நீ சம்பாதித்துத் தரப்போகும் பணத்துக்காகவோ அல்லாமல், உன்னை, உனக்காகவே காதலிக்கிறவனை நீயும் காதலி.
அது, பக்கத்து வீட்டு இளைஞனாகவே இருந்தாலும் காத்திருக்கட்டும். உன் படிப்புக்குச் சமமாக அவனும் படிக்கட்டும். உன் பதவிக்கு நிகராக அவனும் நல்ல பதவியில் இருக்கட்டும். அதை விட்டு, அசிங்கமாய், நாலு பேர் அறிய காதல் கடிதங்கள் பரிமாறிக் கொள்வதும், தனிமையில் சந்திப்பதும், "ஓடிப் போய் விடலாமா' என்று ஒருவரையொருவர் கேட்பதும் நிஜமான காதல் இல்லை; இது ஒரு விதமான மயக்கம்; போதை, அவ்வளவே!
மற்றவர்கள் தங்களை ஏதோ சினிமா கதாநாயகன் போல நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் போட்டுக் கொள்ளும் வேஷம். அதுவும், அந்த இளைஞன், எப்போது நீ சொல்லாத வார்த்தையான, "ஓடிப் போயிடலாமா...' என்று கேட்டதாக அந்த அக்காவிடம் கூறினானோ... அது, அந்த அக்காவின் முன்னிலையில் தனக்குத்தானே போட்டுக் கொண்ட மாலை.
ஒரு வேளை, அந்த அக்கா மனசில் ஒரு விதப் பொறாமையை உண்டு பண்ணி, "பார், என் பின்னால் ஓடி வர இத்தனைப் பெண் கள் இருக்கின்றனர்...' என்று காட்டிக் கொள்வதற்காக இவன், உன்னை பலிகடாவாக்கி இருக்கலாம். புத்திசாலிப் பெண்ணாக இருந்தால், இதையெல்லாம் ஒதுக்கு; நீயும் ஒதுங்கு. வீட்டுக்குள் உன்னை நீயே சிறை வைத்துக் கொள். அப்படி சிறைபட்ட நேரத்தை படிப்பில் செலவிடு.
பட்டாம் பூச்சிகள் இறக்கை முளைப்பதற்கு முன், புழுக்களாக, தன்னைத்தானே கூட்டில் அடைத்துக் கொள்வதில்லையா... அது போலத்தான் இதுவும். மனசை ஒரு முகப்படுத்து; எதையும் நிதானமாய், ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து செய். வாழ்த்துகள்!

No comments:

Post a Comment